தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வந்துள்ள செய்தியை அறிந்த அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நடிகர் விஜயகாந்த்துக்கு இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து, தேமுதிக தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், விஜயகாந்துக்கு ஏற்கெனவே உடல்நிலை பாதிப்பு இருப்பதாலும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தாமாகவே சுவாசித்து வருவதாகவும் உடல் நிலையை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.