‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது. இது அவர்களது குடும்பங்களை பதற வைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது வேலைவாய்ப்பு காரணங்களுக்காக சுற்றுலா/ விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பாக, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஏஜெண்டுகள் மூலமாக சரி பார்க்க வேண்டும். வேலை தருகிற எந்தவொரு நிறுவனத்தைப்பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் அதில் ஏற்கனவே வேலைக்கு சேர்ந்தவர்களை நாடி தகவல்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.