கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்கள் இந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் இருந்து வருகிறார்கள். கிராமத்தில் வசித்து வருபவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் காட்டுப்புதூர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டினை சுமார் 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்துள்ளன. அந்த கல்லறைகளை அகற்றி அந்த சுடுகாடு நிலத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டு அப்பகுதி கிராம மக்களுடன் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காலை 10 மணியளவில் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.