• Fri. Mar 29th, 2024

உ.பி.யில் மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது, பெண் களுக்கு எதிரான குற்றங்களைச் தடுப்பதற்காக ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராகி உள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாட் களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த செயல் திட்டத்தை அரசுவகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரோமியோ எதிர்ப்புப் படை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைக்கப்பட்ட ரோமியோ எதிர்ப்புப் படை கடந்த 2-ம் தேதி தனது பணியைத் தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சந்தைகள், பள்ளி, கல்லூரி பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் இருக்கும் பகுதியில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுவோரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெண்களிடம் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்பவர்கள் குறித்து புகார் தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறும்போது, ‘உ.பி.யில் ரோமியோ எதிர்ப்புப்படை உருவாக்கப்பட்ட பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், பொது இடங்களில் ரோமியோ எதிர்ப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இதன்மூலம் பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் செய்ய முன் வருவார்கள்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *