பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதில் கட்சித் தலைமைப் பொறுப்பு மாற்றம் குறித்த அறிவிப்பு வரலாம் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப்பிறகு, பா.ம.க-வில் மாவட்ட வாரியாக தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸே நேரடியாகக் கலந்துகொள்கிறார். இதுவரை, கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முன்பாக நடக்கும் சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் இந்த ஆண்டு, `2021-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2022-ம் ஆண்டை வரவேற்போம்’ என்கிற தலைப்பில், சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்தக்கூட்டத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கூட்டம் நடத்தப்பட்டாலும், இந்தாண்டு புதிய அறிவிப்பு ஒன்றுவர அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.மருத்துவர் ஐயா, சின்னய்யா அன்புமணியை தலைவராக அறிவிக்க இந்தக் கூட்டத்தில் அதிக வாய்ப்பிருக்கிறது.
நாங்கள் இந்த விஷயம் குறித்து பலமுறை ஐயாவிடம் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக நல்ல முடிவை விரைவில் எடுக்கிறேன் என ஐயா கூறியிருந்தார். அந்தவகையில், நாளை அதற்கான அறிவிப்பு வரலாம். அவர் தலைவராகும் பட்சத்தில், ஜி.கே.மணி வழிகாட்டுதல் குழு தலைவர் போன்ற பொறுப்பை வகிப்பார். ஒருவேளை அறிவிப்பு வராவிட்டால், அதுகுறித்து மீண்டும் வலியுறுத்த முடிவு செய்திருக்கிறோம் என்றனர்.