• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாகையில் நடைபெற்ற அமமுக செயற்குழு கூட்டம்..,

ByR. Vijay

Jun 24, 2025

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளராக பதவி விகித்த மஞ்சுளா சந்திரமோகன் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மனியன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நாகையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. கட்சியின் துணை பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் மற்றும் நாகை கீழ்வேளூர் வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முக்கிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் நியமிப்பது தேர்தலுக்கு தயாராகுவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டதுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாகையில் கூண்டோடு கலைக்கப்பட்டது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் துணை பொது செயலாளர் எம். ரெங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே அதிமுகவில் இணைந்திருப்பதாகவும், மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாகை மாவட்டத்தில் கூண்டோடு கலைக்கப்பட்டது என்று ஓஎஸ் மணியன் கூறியது முற்றிலும் தவறு என்று கூறியவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அமமுக தயாராகி வருவதாக கூறினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறிய ரங்கசாமி, தமிழகத்தின் தற்போதைய திமுக ஆட்சியை அகற்ற பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.