தொடர்ந்து 2-வது முறையாக மலையாளப் பெண் ஒருவர் அமெரிக்காவில் நீதிபதி பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஆவார். கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரசியமானது. இவரது தந்தை அங்கே தொழில் அதிபர். அவர் சில வழக்குகளை எதிர்கொண்டபோதுதான், இந்த பெண்ணுக்கு முதன்முதலாக சட்டம் படிக்கும் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது. பிலடெல்பியா மாகாணத்தில வளர்ந்த அவர் பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்து வக்கீல் ஆனார். 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி ஆனார். இதன்மூலம் அங்கு முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெயரைப் பெற்றார்.
இப்போது தொடர்ந்து 2-வது முறையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பென்ட் கவுண்டியில் நீதிபதியாகி இருக்கிறார். இந்த பதவிக்காக நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய இவர், குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன்பர்க்கை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார். இதன் மூலம் அங்கு இன்னும் 4 ஆண்டுகள் நீதிபதி பதவி வகிப்பார். கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராம வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக போர்ட் பென்ட் கவுண்டி நீதிபதியாக அவர் பதவி ஏற்றார்.