‘எனக்கும் அமீர்கானுக்கும் தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை” என்று நடிகை பாத்திமா சனா ஷேக் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு, ‘லகான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவதாக கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 16 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்குப் பிறகு இந்தத் தம்பதிகள் கடந்த ஜூலை மாதம் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்தனர்.
தற்போது தனியாக வாழ்ந்து வரும் அமீர்கான் ‘தங்கல்’ படத்தில் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
அடுத்ததாக ‘லால் சிங் சட்டா’ படம் வெளியானவுடன் அதிகாரபூர்வமாக திருமணம் குறித்த அறிவிப்பை அமீர்கான் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அமீர்கானுக்கும் தனக்கும் திருமணம் என்ற வதந்தி குறித்து பாத்திமா சனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
‘நான் இதுவரை சந்திக்காத ஒரு சில பேர் என்னைப் பற்றி எழுதுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் ‘என்னைக் கேளுங்கள், நான் உங்களுக்கு பதில் தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது என்னைத் தொந்தரவு செய்கிறது, ஏனென்றால், மக்கள் என்னை தவறான கருதுவதை நான் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.