அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கடந்த 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தாக்குதல் நடைபெற்றது.மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் காசிபாண்டியன், காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியா் சாய் வா்த்தினி, அதிமுக அலுவலகம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். தொடர்ந்து, அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி முறையிட்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தனியாக நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.