நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம், நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் இன்பெக்டரை மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தின்போது வாகனங்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் முயன்றதை அடுத்து காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் காவல் ஆய்வாளரை இவ்வாறு விமர்சித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கடந்த மழை வெள்ளத்தில் துரிதமாக அரசு செயல்படவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தும் தமிழக அரசு ஏன் அதை குறைக்க வில்லை என்றும் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அரசு அதிகாரிகளையும் காவல் ஆய்வாளரையும் மேடையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர்.