• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தங்கமணி கோட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது.

இதில், மிகவும் முக்கியமான நகராட்சியாக பார்க்கப்பட்ட குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவியது காரணம், முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான தங்கமணியின் சட்டமன்ற தொகுதி என்பதால் எப்படியாவது தக்க வைக்க அதிமுகவும், அதனை முறியடிக்க திமுக வியூகம் வகுத்து செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், தி.மு.க 14 இடங்களையும், அ.தி.மு.க 10 இடங்களையும், சுயேச்சைகள் 9 இடங்களையும் கைப்பற்றினர். இதனால், தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாததால், இரண்டு தரப்பும் சுயேச்சைகளிடம் பல லட்சங்களில் குதிரை பேரம் நடத்தியது.

இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே கடந்த 4-ம் தேதி நடந்த நகர் மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் 31-வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் விஜய கண்ணனும், திமுக சார்பில் 8-வது வார்டில் வெற்றி பெற்றச் சத்தியசீலனும் போட்டியிட்டனர்.
இதில், அதிமுகவைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் ரேவதி, 17வது வார்டு உறுப்பினர் நந்தினி தேவி ராஜகணேஷ் மற்றும் 16-வது வார்டு உறுப்பினர் பூங்கொடி வெங்கிடு உள்ளிட்டோர் அதிமுக நகர செயலாளர் ஏ.கே.நாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதிமுக தலைமைக் கழகம் இன்று அதிமுக நகர செயலாளர் ஏ.கே.நாகராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அவரது கணவர்கள் உட்பட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக நகரச் செயலாளராக இருந்த நாகராஜன் அதிமுக கட்சியை ஒரு கோடி ரூபாய் விலை பேசி விற்றதாகவும், இதற்கு உடனடியாக அதிமுக தலைமை உரிய நடவடிக்கை எடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கூறி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.