தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி பகுதியில் உள்ள ருத்துராய பெருமாள் கோவில் அருவியில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் தோன்றிய திடீர் அருவியை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் கூட்டம் கூட்டமாக வந்து அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். மேலும் பாறையில் இருந்து வழுக்கி வந்து தண்ணீரில் குதித்து மகிழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட ருத்துராய பெருமாள் கோவில் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பாக வந்து குளித்து சுற்றிப்பார்த்துவிட்டு செல்கின்றனர். மிகவும் வறட்சியாக காணப்படும் ஆண்டிப்பட்டி பகுதியில் மழையால் திடீர் அருவி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருவி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.