• Mon. May 12th, 2025

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான இடம் தயார்: ஏற்பாடுகள் தீவிரம்..!

Byவிஷா

Jun 28, 2022

ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே.
கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின் தலைமையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு நடைபெறும் எனவும். அன்றைய தினம் கட்சிக்கு ஒற்றைத் தலைமை யாரென ஒருமனதாக முடிவு செய்யப்படும் என்றும் இபிஎஸ் தரப்பில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்றுள்ளதால் அது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். அதேசமயம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி உள்ளது.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை எங்கு கூட்டலாம்? என்று தீவிர ஆலோசனையில் இறங்கியது இபிஎஸ் தரப்பு. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி, கோவை மற்றும் சேலம் என பல்வேறு இடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் குழு சென்னையில் எங்கெல்லாம் நடத்தலாம் என்று பட்டியல் போட்டது. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு, விஜிபி ரிசார்ட்டை தேர்வு செய்து, இங்கேயே அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளார்கள். இதை அடுத்து பொதுக்குழு கூடுவதற்கான இடம் முடிவாகி விட்டதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஓபிஎஸ் தரப்பு இறங்கக்கூடும், அதனை முறியடிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பு.