• Thu. Apr 25th, 2024

திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும்..,
ஜெயக்குமார் பேட்டி..!

Byவிஷா

Jul 5, 2022

ஜூலை 11ஆம் தேதியன்று திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,
“நமது அம்மா நாளிதழில் முன்னாள் பொறுப்பாசிரியர் மருது அழகுராஜ், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்து கூலிக்கு மாரடிக்கிறார். கட்சிக்காக என்ன செய்தார்? சிறைக்கு சென்றாரா? எதுவும் செய்ததில்லை. ஏற்கனவே பல கட்சிக்கு தாவிவிட்டு நமது அம்மா பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். விளம்பர பணங்கள் உட்பட கணக்கில் வராமல் நிறைய கையாடல் செய்ததால் தான் அங்கிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தற்போது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்.
பொதுக்குழு நீதிமன்ற வழிகாட்டுதல் படி முறையாக நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 98 சதவீதம் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ் ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என கூறுகின்றனர். அதிமுக சட்டவிதிகள் படியே இதுவரை அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த பொதுக்குழுவும் சட்டப்படி நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் மீது சேற்றை வாரி இரைத்து அவமதிப்பது போல மருது அழகுராஜ் பேசியுள்ளார். எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக விரைந்து குற்றவாளிகளை கண்டறிந்தவர் அன்றை தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி. ஆனால், குற்றவாளிகளை ஜாமினில் எடுத்தவர்கள் திமுகவினர். குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கியது திமுக தான். சட்டத்தின் படி குற்றவாளிகளை தண்டிக்க இ.பி.எஸ் நடவடிக்கை எடுத்தார். ஆனால், கொடநாடு சம்பவம் குறித்து மருது அழகுராஜ் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்.

தர்மயுத்தம், டி.டி.வி தினகரனை மறைமுகமாக ஓ.பி.எஸ் சந்தித்தது, ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்து என மாறி மாறி ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்துகளை ஏன் மருது அழகுராஜ் விமர்சிக்கவில்லை. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே திமுகவுக்கு எதிராகத்தான், ஆனால், தீய சக்தியான திமுக உடன் கைகோர்க்கும் வண்ணம் ஓ.பி.எஸ் நடவடிக்கைகள் இருந்தன. ஓ.பி.எஸ் நடவடிக்கைகளை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக எதிர்ப்பில் எம்.ஜி.ஆர் இறுதிவரை உறுதியாக இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? கட்சியினரிடையே இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ் திமுகவுடன் கைகோர்த்து இருப்பதாகவும், திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்து வருவதாகவும் அன்றே சசிகலா கூறி இருந்தார். 
கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திட்டமிட்டபடி வருகின்ற ஜூலை 11ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாஷா உள்ளிட்டேர் படுகொலைகள் குறித்தும் திமுக உரிய விசாரணை நடத்திட வேண்டும். திமுக எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக பொய் வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. வழக்கு போடுவதால் மட்டுமே அதிமுக அழிந்துவிடும் என நினைப்பது தவறானது. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக ஆட்சி காலத்தில் நடந்த படுகொலைகள் அனைத்தும் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்தி டிடிவி தினகரன். ஆளாளுக்கு ஒரு வண்டி எடுத்து தமிழ்நாட்டை சுற்றிப் பயணம் செய்து வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்ப்பே இறுதியானது. பொதுக்குழுவில் முடிந்தால் ஓ.பி.எஸ் பலத்தை காட்டட்டும். ஓ.பன்னீர் செல்வம், 5 சதவீதம் உறுப்பினர்கள் ஆதரவு கூட இல்லாமல் கட்சியை கட்டுப்படுத்த நினைப்பது தவறானது. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் வகையில் ஓ.பி.எஸ் செயல்படுகிறார். அவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்போது வரை ஜெயலலிதா அதிமுக கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர். ஆடிட்டர் குருமூர்த்தி ஓ.பன்னிர்செல்வத்தை பார்த்து நீங்கள் ஆம்பளையா என கேட்டார். அன்று ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக நான் இருந்தேன். இன்று ஓ.பி.எஸ் கருத்து தவறாக இருக்கிறது ஆகவே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்து அவமரியாதை செய்தனர். ஓ.பன்னீர் செல்வம், திமுகவின் பீ டீமாக இருந்தால் தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள். விமர்சனங்கள் மென்மையாக இருந்தால் பதில் மென்மையாக இருக்கும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *