வருகிற அக்டோபர் 14 மற்றும் 15-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வருகிறது. வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதியுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்றார்போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உயர்அதிகாரி கூறும்போது, தமிழகத்தில் தற்போது இயக்கப்பட்டுவரும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் உள்ளன. தற்போது ஆயுதபூஜை பண்டிகை வருவதால் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்றார்போல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்களை இயக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள், சொகுசு பேருந்துகளும் இதில் அடங்கும். 300 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.