• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா அரசிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன்… நடிகர் கிச்சா சுதீப் பரபரப்பு ட்வீட்

ByP.Kavitha Kumar

Jan 24, 2025

கர்நாடக அரசால் தனக்கு வழங்கப்பட இருந்த சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் ஏற்க மறுத்துள்ளார். அதற்காக மாநில அரசிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகரான கிச்சா நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்புக்கு கர்நாடக மாநில அரசு சிறந்த நடிகருக்கான விருதை வழங்க முன்வந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பயில்வான்’ என்ற படத்திற்காக, கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவில் சுதீப் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான மாநில ஆண்டு திரைப்பட விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்தது.

கொரோனா காரணமாக 2019-ம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடக அரசின் விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது 2019-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த விருதுகளில் 2020 முதல் 2024 வரையிலான விருதுகள் இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை ஏற்க நடிகர் கிச்சா சுதீப் மறுத்துள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் கிச்சா சுதீப் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “மதிப்பிற்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் மன்றக் குழுவிற்கு, சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது பாக்கியம். மேலும் இந்த கவுரவத்திற்காக நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளைப் பெறுவதை எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்து வருகிறேன்.

இந்தக் கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த விருதுக்கு என்னை விட அதிக தகுதியானவர்களில் ஒருவர் இந்த விருதைப் பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். விருதுகளைப் பொருட்படுத்தாமல், முழு மனதுடன் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். நடுவர் குழுவின் இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

இந்த அங்கீகாரம் எனது வெகுமதி என்பதால், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒவ்வொரு நடுவர் மன்ற உறுப்பினருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும், மாநில அரசிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னைப் பரிசீலித்ததற்காக, நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும், மாநில அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.