நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் இன்று மறைந்தார்.
தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற முத்தான திரைப்படங்கள் என்றென்றும் அவரது புகழை பரப்பும் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கி கெளரவித்தது. பத்மஸ்ரீ விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார்.
இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் கமலஹாசன் நடித்த ‘குருதி புனல்’, அஜித்துடன் ‘முகவரி’, பார்த்திபன் நடித்த ‘காக்கைச் சிறகுகளே’, விஜய் நடித்த ‘பகவதி’ நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ என அண்மைக்காலம் வரை பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.இயக்கம், நடிப்பு இரண்டிலும் தனித்துவம் கொண்ட கே.விஸ்வநாத் நடிகர் கமலுக்கு மிகவும் பிடித்த மனிதர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் கடந்த பிறந்தநாள் அன்று கே. விஸ்வநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தன்னுடைய 92 ஆவது வயதில் கே.விஸ்வநாத் காலமானார். இவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.