• Sun. Apr 28th, 2024

சுறுசுறுப்பாக துவங்கியது பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்

Byகாயத்ரி

Jan 1, 2022

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் சுறுசுறுப்பாக தொடங்கியது.

புத்தாண்டு இன்று பிறந்த நிலையில் அடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை, ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

அதில், தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்ய வேண்டும் என்றும், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.இதனையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3ஆம் தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பெறும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
பொங்கல் பரிசு பொருளை பெறுவதற்கு பொதுமக்களின் கைரேகை பதிவு கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

அதனால் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் ரேஷன் அட்டையை காண்பித்து கையொப்பமிட்டு பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. சென்னையில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். வருகிற 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *