சென்னை அருகே இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குன்றத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் அஜித்குமார், மாலை பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் லிஃப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.ஆவடி அருகே 2 பேர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது லிஃப்ட் கேட்டு ஏறிய நபர் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து அஜித்குமாரை அடித்து உதைத்து, செல்போன் தங்கச்சங்கிலி, மோதிரத்தைப் பறித்தனர்.
மேலும் அவரை மிரட்டி, கூகுள் பே மூலம் 13 ஆயிரம் ரூபாயை தங்கள் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப வைத்துவிட்டு மாயமாகினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கூகுள் பே செயலியில் பணம் அனுப்பப்பட்ட எண், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை ஆவடி காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த மூவரையும் 7 மணி நேரத்தில் கைது செய்து, பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.