• Wed. Apr 24th, 2024

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!

ByA.Tamilselvan

Apr 9, 2023

பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். ஆஸ்கர் விருது வென்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்தித்து கலந்துரையாடி இருவரையும் பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தங்களிடம் கலந்துரையாடியது பற்றி பெள்ளி கூறியதாவது: பிரதமர் மோடி இன்று காலையில் காரில் இறங்கி வந்து எங்களை சந்தித்தார். கரும்பை எடுத்து ரகு, பொம்மிக்கு(2ம் அவர்கள் வளர்த்த யானைக்குட்டிகள்) கொடுத்தார். யானைகுட்டிகளை எப்படி வளர்த்தீர்கள் என்பது எனக்கு இப்போது தான் தெரியும். உங்களை போல் கர்நாடகா, கேரளாவில் யாரும் யானைக்குட்டிகளை வளர்க்கவில்லை என கூறினார். இந்த ஆவணப்படம் எப்படி எடுத்தது என கேட்டார். நீங்கள் ஏதாவது சொல்லி எடுத்தார்களா? என வினவினார். அதற்கு அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் சொல்லாமலே எடுத்துவிட்டார்கள் என்றோம்.
அப்போது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. உங்களிடம் சொல்லாமல் தான் எடுத்துள்ளார்கள். அதனால் தான் உங்களை பாராட்ட இங்கு வந்தேன் என்றார். மேலும் டெல்லிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அழைத்தார். அதற்கு நாங்கள் நீங்கள் இங்கு வந்ததே பெருமையாக இருக்கிறது. உங்களை நாங்கள் பார்த்துவிட்டோம் என்றோம். அதற்கு இல்லை இல்லை.. டெல்லிக்கு கண்டிப்பாக 2 பேரும் வர வேண்டும் என்றார். ஒரே முடிவு வந்துதான் ஆக வேண்டும் என்றார். இதையடுத்து ஒன்றாக போட்டோ எடுத்து கொண்டோம்” என நெகிழ்ச்சியாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *