• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கனிமம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரி மோதி பெண் பலி… கல் குவாரியை மூட உத்தரவிட்ட ஆட்சியர்..,

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தினசரி பல நூறு டாரஸ் லாரிகள் பகல்,இரவு என்ற வேற்றுமை இன்றி கேரள மாநிலத்திற்கு பயணப்படும் நிலையில், இத்தகைய டாரஸ் லாரிகளால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ஒற்றை சாலையில் பயணப்படும் பிற வாகனங்கள், பாதசாரிகளுக்கு பெரும் இன்னலாக இருப்பது குறித்து தினம், தினம் புகார் வந்தாலும் அரசின் நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை என்பது குமரி மாவட்டம் மக்களின் புகாராக உள்ளது.

கனிமம் டாரஸ் லாரிகளால் அவ்வப்போது விபத்து ஏற்படும் போதெல்லாம், இரண்டு நாட்கள் டாரஸ் லாரிகளின் எண்ணிக்கை சற்றே குறையும், பின்னர்…..?

குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (45) இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா(40) இவர்களுக்கு ஆரோன்(13), அப்ரின்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கணவனும், மனைவியும் நேற்று (ஜனவரி_23) மதியம் 1.45 மணி அளவில் வெண்டலிகோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களது பின்னால் ஒரு டாரஸ் லாரி சுமை இல்லாது காலி நிலையில் வந்து கொண்டிருந்தது.

சித்திரங்கோட்டில் உள்ள கல்குவாரியில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்வதற்காக வந்துகொண்டிருந்தது. அப்போது டாரஸ் லாரியின் முன்னால் இருவர் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை முந்தி செல்ல டாரஸ் லாரி முயன்ற போது முன்னால் கணவன்,மனைவி பயணப்பட்ட இரு சக்கர வாகனத்தில் மோதியது.

டாரஸ் லாரி மோதிய வேகத்தில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த பெண் சாலையில் விழ. கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே அனிதா மரணம் அடைய, கணவர் அமல்ராஜ் படுகாயம் அடைந்தார். விபத்திற்கு காரணமான டாரஸ் லாரியின் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் அமல் ராஜ்யை,குலசேகரன் தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

டாரஸ்லாரி ஓட்டுநரே அனிதா மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டியதுடன். மரணம் அடைந்த அனிதாவின் உறவினர்கள் உடன் பொது மக்களும் மரணம் அடைந்த அனிதாவின் பூத் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதுடன். குமரி மாவட்ட சாலைகளில் டாரஸ் லாரிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன். காலை 7மணியிலிருந்து,இரவு 9_மணி வரை டாரஸ் லாரியின் ஓட்டத்தை தடை செய்யவேண்டும் என கோசம் இட்டனர்.

நேரம் செல்ல, செல்ல குறிப்பிட்ட பகுதியில் பொது மக்கள் பெரும் கூட்டமாக கூடியதால் அந்த பகுதியில் முழுவதும் போக்குவரத்து தடைப்பட்டது.

அனிதாவின் பூத் உடலுடன் சாலையில் போராட்டம் நடத்தியவர்களுடன், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் முன்னாள் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன்.குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாக்டர்.பினுலால்,திமுக நீங்கலாக அனைத்துக் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

சாலையில் போராட்டம் நடத்தியவர்களுடன்.திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ், காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்.

குமரியில் பகல் நேரத்தில் கனிமவளங்களுடன் டாரஸ்லாரி வாகனத்தை தடை செய்வோம் என்ற வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்பதில் போராட்ட காரர்கள் உறுதியாக இருந்தனர். சூழலில் கடினத்தை உணர்ந்து அதிரடிப்படை வரவழைக்கப்பட்டனர்.

மாலை கடந்து முன் இரவு நேரத்தை கடந்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.பத்மநாபபுரம் இணை ஆட்சியர் (பொறுப்பு) லொரைட்டா, குளச்சல் துணை கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் போராட்டத்தால் . மதியம் 2_மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8_மணியையும் கடந்து நீடித்தது.

முதல் கட்ட நடவடிக்கையாக சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரிகள் மூடப்படும், உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கொடுத்தின் அடிப்படையில்.அனிதாவின் பூத உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், போராட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தினம் கனிமம் எடுத்து செல்லும் டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்துவார்களா.? இதுவே குமரி வாழ் பொதுமக்கள் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி குறி.