அக்னிநட்சத்திரம் துவங்கவுள்ள கோடைகாலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 7-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த மண்டலமாக, அதாவது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தன்மை, நகர்வு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 7-ஆம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக முழுவதுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.