• Tue. Feb 18th, 2025

கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்…

ByKalamegam Viswanathan

Jan 16, 2025

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட தனியார் நிறுவனம் மறுத்துள்ளது.

கிராம மக்கள் – தனியார் நிறுவனம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில், போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி.

மதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகா சோளங்குருணி கிராமத்தில் அருள்மிகு போத்தி ராஜா – வள்ளியம்மை திருக்கோவில் உள்ளது.

சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இக்கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த 500 வருடங்களாக வண்டி பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர் ஆர் கன்ஸ்ட்ரக்சன் ஆகிய நிறுவனம் சோளங்குருணி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கி பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர். பில்டர்ஸ் அன்று முதல் வழிபாடு நடத்த தங்கள் இடத்தின் வழியாக அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால் இன்று கிராம மக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னோட்டமாக பெட்டி சாமி வைத்து பூஜை செய்ய 100 க்கும் மேற்பட்டோர் சென்ற போது ருத்ரா பிரமோட்டர்ஸ் மேலாளர் இஸ்மாயில் பாதையில் உள்ள கதவை திறக்க மறுத்துள்ளார்.

இதனால் சோளங்குருணி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். சோளிங்குருணி கிராம மக்கள் – மற்றும் தனியார் நிறுவனம் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இது குறித்து பெருங்குடி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் பெருங்குடி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் போத்தி ராஜா – வள்ளியம்மாள் கோவிலுக்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் . அதனைத் தொடர்ந்து சோளங்குருணி கிராம மக்கள் பூஜை நடத்தி செல்லலாம் என கூறினர்.

அதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் சாமி கும்பிட்டு புறப்பட்டு சென்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்களின் செயலால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு சாமி கும்பிட பாதை ஒதுக்கி தருமாறு மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.