• Sat. Mar 22nd, 2025

தமிழ்நாடு பசுமை திட்ட தூதராக ஒரு வயது குழந்தை நியமனம்

Byவிஷா

Mar 4, 2024

உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையாக அறிவிக்கப்பட்ட ஆதவியை, தமிழ்நாடு பசுமை திட்ட தூதராக அதன் தலைமை இயக்குநர் தீபக்ஸ்ரீவஸ்தவா ஐஎப்எஸ் அறிவித்துள்ளார்.
சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் சீராக்கு அமைப்பின் புத்தம் புது முயற்சி நோவா திட்டம். இதன் மூலம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளின் பெயரில் மரங்களை நட்டு கார்பன் அளவை மட்டுப்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் முதல் ‘கார்பன் நியூட்ரல் பேபி’ – நோவா குழந்தை அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி, தினேஷ் க்ஷத்ரியன், ஜனகனந்தினி தம்பதியருக்கு மகளாய் பிறந்த டி.ஜே. ஆதவி உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
தினேஷ் க்ஷத்ரியன் மற்றும் ஜனகநந்தினி ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம், சிவலிங்கபுரம் கிராமத்தில் 6000 மரங்கள், புதர்கள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கிய உணவுக் காடுகளை உருவாக்கினர். அதன் மூலம், கார்பன் நடுநிலைமை ஏற்படுத்தி உள்ளனர். இந்த முயற்சி கார்பன் தடயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நிலையான வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒரு முன்மாதிரியாகவும் செயல்படுகிறது. நோவாவின் இந்த சாதனையை பாராட்டி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி வழங்கினார்
மேலும், தமிழ்நாடு பசுமை திட்டத்தின் தலைமை திட்ட இயக்குநரான திரு. தீபக் ஸ்ரீவஸ்தவா ஐஎப்எஸ், ஆதவியை தமிழ்நாடு பசுமை திட்டத்தின் குழந்தை தூதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் மேடையில் வலியுறுத்தினார்.