தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பொதுமக்களின் சார்பில், இந்த ஆண்டு விசேஷ அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. வழக்கமாக தைப்பூச நாளன்று பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தொண்ணையில் பிரசாதம் வழங்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

இருப்பினும், இந்த ஆண்டு ஒரு முக்கிய நோக்கை முன்வைத்து இந்த விழா விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், பழனி ஆண்டவர் கோவிலின் ஆன்மீகச் சிறப்புகளைப் பொதுமக்களிடையே அதிக அளவில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், இந்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, மாலை வேளையில், மலை மேல் தீபம் ஏற்றும் அறப்பணி நிறைவேற வேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் மகா திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாவை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றியுள்ளனர்.

தைப்பூசத் திருநாளில் அறுபடை வீட்டின் முதல் படைவீட்டில் கூடும் பக்தர்களுக்குப் பசியாற்றவும், ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பழனி ஆண்டவர் கோவில் தெரு பொதுமக்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.










