

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னிகவுண்டன்பாளையம் கல்லுக்குத்து காடு பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டதில் உள்ள வீட்டில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரிலிருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டருக்கு மாற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் எரிவாயுவை மாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முருகன் 46 மற்றும் செல்வகணேஷ் 26 ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவயிடம் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே சட்டவிரோதமாக வீட்டு சமையல் சிலிண்டரில் இருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டிற்கு மாற்ற முயன்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


