கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளித்ததை தொடர்ந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் கடந்த 20 வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பலசரக்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24-ம் தேதி உறவினர்கள் நண்பர்களுடன் கோவை மாவட்டம் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து 7-வது கிரிமலை ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் போது இன்று அதிகாலை 3-வது மலையில் இறங்கி வரும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இவருக்கு நித்யா என்ற மனைவி மற்றும் 3 ஆண் குழந்தைகளும் உள்ளது. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருதயத்தில் பிரச்சினை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை (ஆஞ்சியோ) செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆலாந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இதய பிரச்சினை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏறக்கூடாது என்று தொடர்ந்து வனத்துறையினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




