• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற கரடி

ByG. Anbalagan

Feb 9, 2025

கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர் .

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் தொடர்ந்து உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. கோத்தகிரி மாதா ஆலயம் பகுதியில் அரசு மருத்துவமனை, நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், தனியார் மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவிகள் விடுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிறப்பு வகுப்புகள் முடிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 7 மணிக்கு கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது.

சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி, பின்னர் அருகிலிருந்த புதர் மறைவிற்குள் சென்று மறைந்தது. கரடியைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி கரடியை தங்களது செல்போனில் படம்பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.