திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான ஐ.பெரியசாமி அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

விட்டல்நாயக்கன்பட்டிக்கு வந்தபோது கிராம மக்கள் மகிழ்ச்சியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரியும் நிலைமை உருவாகியுள்ளது. இதுதவிர திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 2 ஆயிரமும், குடும்பத் தலைவிகளின் தேவைக்கு ஏற்ப வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் வகையில் ரூபாய் 8000 மதிப்புடைய கூப்பன்களை இரண்டு கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க உள்ளார்.

இதனால் தமிழகத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் திராவிடமாடல் ஆட்சிநாயகன் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டுமென விரும்புகிறார்கள். இதற்கான அறிவிப்பு சட்டமன்ற முதல் கூட்டத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளி ஒருவர் 100 நாள் வேலைத்திட்டம் வேண்டும் என கேட்டுள்ளார். நிச்சயமாக மே, 10-க்கு பிறகு ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னளாபட்டி, அய்யம்பாளையம், ஸ்ரீராமபுரம், சித்தையன்கோட்டை மற்றும் அகரம் பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதுதவிர இப்பகுதியில் மில்கள் அதிகமாக உள்ளன. தொழிலாளர்கள் நலன் கருதி திண்டுக்கல் அருகே நவீன வசதிகளுடன் கூடிய தொழிலாளர் நல மருத்துவ மனை (ஈ.எஸ்.ஐ.) அமைத்துத்தரப்படும்.

தேர்தல் பிரச்சாரத்தில்; மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, திமுக தலைமை செயற்குழு உறுப்பி;னர் ஆத்தூர் நடராஜன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாடிக்கொம்பு கவிதா சின்னத்தம்பி, அகரம் நந்தகோபால், துணைத்தலைவர்கள் ஜெயபால், நாகப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், தகவல் தொழில்நுட்;ப அணி வாஞ்சிநாதன், விட்டலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணி, உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




