• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது: தமிழகத்தில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (வெள்ளிக்கிழமை) வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக 12-ந் தேதியன்று வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மிதமான முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து நாளை முதல் 13-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதில் நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 12-ந் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.