ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்ய நிரந்தர கடைகள் அமைக்க முடிவு.
மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுரையில் சுங்குடி சேலை, தூத்துக்குடியில் மக்ரூன், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், பழனியில் பஞ்சாமிர்தம், ராமேசுவரத்தில் கடல்பாசி, நெல்லையில் பனை பொருட்கள் ஆகியவை விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட ரெயில் நிலையங்களில் நிரந்தர கடைகள் அமைக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக ரெயில்வே வாரியம் சார்பில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் தேசிய வடிவமைப்பு நிறுவன ஆலோசனை பேரில் கட்டப்படும் என்று தெரிகிறது.