பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், பி.இ., மற்றும் பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தரவரிசையை இறுதி செய்வதற்கான ரேண்டம் எண், கடந்த 2 ஆம் தேதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும். இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.இதனையடுத்து வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் 25ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.