கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளி மாணவியின் மரணம் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி இந்த பள்ளி குறித்து விசாரணை செய்தபோது பள்ளியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிடுவோம் என மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி உரிய அனுமதி இன்றி இயங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பள்ளி விடுதியை நடத்தி வந்தது கண்டிக்கத்தக்கதாக கருதப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தினால் மாணவி மரணம் குறித்து சந்தேகமும் அதிகரித்துள்ளது.