சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரைமாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சுற்றிவரும். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜூலை 28ம் தேதி அன்று தமிழகத்தில் முதல்வர் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்குகிறது. செஸ் ஜோதி ஓட்ட தொடக்க விழாவில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். முதல்முறையாக தொடங்கப்படும் இந்த ஜோதி ஓட்டம் இனிவரும் ஒலிம்பியாட் தொடர்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.