டெல்லியில் 2012ம் ஆண்டு அரங்கேறிய நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வேன் ஒன்றில், நேற்று முன் தினம் இரவு 34 வயதுடைய பெண் ஒருவர், மிகவும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், அந்த பெண்ணை ஒருவர் தாக்கிக்கொண்டு இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட போலீசார் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மீட்டு, அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் போலீசாரிடம் பகிர்ந்து கொண்ட தகவல் உச்சகட்ட கொடூரமாக இருந்துள்ளது. அதாவது பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து மிக கடுமையாகச் சிதைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த பயங்கர கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார். இச்சம்பவத்தில் தொடர்புடையது யார் என தீவிர விசாரணையில் இறங்கினர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் இப்படிப்பட்ட கொடூரமான செயலில் ஈடுபட்டது 45 வயதான மோகன் சவுகான் என்பதை கண்டறிந்து சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். மோகன் சவுகான் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாட்டையே மீண்டும் ஒருமுறை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.