வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டுதொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் சார்பாகவும் அனைத்து எம்எல்ஏக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசு புத்தக கண்காட்சி மட்டுமல்லாமல் நூல்கள், நூலகங்களுக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து நூலகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பழுதடைந்த நூலகங்களுக்கு விரைவில் புதிய நூலக கட்டிடங்கள் கட்டித் தரப்படும். மேலும் 7000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் வகுப்பறைகள் மேம்படுத்தப்படும். இதற்கிடையில் முன்னதாகவே வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் படிப்படியாக அனைத்து வகுப்பறைகளும் மேம்படுத்தப்படும் என்று” கூறியுள்ளார்.