• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

டாக்டர் சுப்பையாவுக்கு மார்ச் 31ம் தேதி வரை சிறை

வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மார்ச் 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம், 2020ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்துவரும் மருத்துவர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதம்பாக்கம் போலீசார் மருத்துவர் சுப்பையாவை கைது செய்துள்ளனர்.

பின்னர், ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மெஜிஸ்திரேட் இல்லத்தில் மருத்துவர் சுப்பையா ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, மார்ச் 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மெஜிஸ்திரேட் வைஷ்ணவி உத்தரவிட்டார்.

முன்னதாக, ஆலந்தூர் நீதிமன்றத்தில் மருத்துவர் சுப்பையாவை அழைத்து வந்த போது பாஜகவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் முன் குவிந்திருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்போடு அவர் அழைத்து செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் மருத்துவர் சுப்பையாவை அழைத்து வந்த போது வழக்கறிஞர் சிலரை போலீசார் அனுமதிக்காததால் போலீசாருடம் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சமீபத்தில் இவர் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் இருந்த ஏபிவிபி நிர்வாகிகளை சந்தித்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.