ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர். இவர் மனைவி ராய்பதி சாபர் . இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலையில் ராய்பதி சாபர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார். இந்நிலையில் ராய்பதிக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது ஏங்கி ஏங்கி அழுதபடியே இருந்தார், நிலமணி. சிதைக்கு தீ மூட்டியபின் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சிதையை நோக்கி ஓடிய நிலமணி, அதில் திடீரென குதித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், அவரை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உடல் முழுவதும் தீ பிடித்தது. இதனால் அவரும் உயிரிழந்தார். மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் கணவர் உயிர்விட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.