நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாநில, பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கக்கனல்லா சோதனைச்சாவடியை நோக்கி வந்த சைரன் இல்லாமல் ஆம்புலன்ஸை சோதனை செய்ய போலீசார் நிறுத்தியபோது, டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலைகுந்தா சோதனைச்சாவடியிலும் ஆம்புலன்ஸ் நிற்காமல் சென்றது.
இதையடுத்து ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசார் ஊட்டி-கூடலூர் சாலை ஹில்பங்க் பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்சில் மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்புலன்ஸ் டிரைவரான குன்னூரை சேர்ந்த தப்புரேஸ் (வயது 20) என்பவர் கல்லூரியில் படித்து வரும் 3 மாணவர்களுடன் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றதும், பின்னர் மைசூருவில் போதைப் பொருட்களை வாங்கி ஆம்புலன்சில் குன்னூருக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர், ஆம்புலன்ஸ் டிரைவர் தப்புரேஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ போதை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்புலன்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.