• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

Byகுமார்

Feb 18, 2022

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 347 பேர் போட்டியிடுகின்றனர்.

நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்துள்ளன. இதனையொட்டி மதுரை மாவட்டத்திலும் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் தேர்தல் பரப்புரை நேற்றய மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 1,122 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சிகளைப் பொறுத்தவரை உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 163 பேரும், திருமங்கலம் நகராட்சியில் 147 பேரும் மேலூர் நகராட்சியில் 172 பேரும் என மொத்தம் 482 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சிகளைப் பொறுத்தவரை தே.கல்லுப்பட்டியில் 77 பேரும், அ.வெள்ளாளப்பட்டியில் 78 பேரும், சோழவந்தானில் 98 பேரும், பேரையூரில் 98 பேரும், எழுமலையில் 88 பேரும், பாலமேட்டில் 54 பேரும், பரவையில் 83 பேரும், வாடிப்பட்டியில் 91 பேரும், அலங்காநல்லூரில் 76 பேரும் என மொத்தம் 743 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள 1,215 வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட உள்ளன.