மேற்கு வங்கஅரசுக்கும், ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், புதிய திருப்பமாக, ஆளுநர் ஜக்தீப் தன்கர் சனிக்கிழமையன்று மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கியுள்ளார். அரசியல் நிர்ணய சட்டப்பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காவரையறையின்றி முடக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் பிரிவு (a) ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான ஜக்தீப் தன்கர், ஆகிய நான் மேற்கு வங்காள சட்டமன்றத்தை பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்,” தங்கர் ட்வீட் செய்துள்ளார். தனது கையெழுத்திட்ட உத்தரவையும் ஆளுநர் அதில் இணைத்த்துள்ளார். மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக சட்ட சபை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் உத்தரவு குறித்து கருத்து தெரித்த திரிணாமுல் தலைமை இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று கூறியுள்ளது. சட்டசபையில் ஆளுநர் உரையுடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க இருந்த நிலையில், சட்டசபை முடக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநில அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அது அரசின் செயல்பாட்டை பாதிக்கும். மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்ததாக கூறினார். சமீபகாலமாக, மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆளுநருக்கும், மேற்கு வங்க சட்டசபை சபாநாயகருக்கும் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது.
Post navigation