இந்திய இயற்பியலாளர் சி. பஞ்சரத்தினம். இவர் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டு விளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது. பஞ்சரத்தினம் 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார்.இவரது 25ஆவது அகவையில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். 1961 முதல் 1964 வரை மைசூர் பல்கலைக்கழகம் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.இவரின் ஆய்வுகள் சி. வி. இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு முறை ஜவகர்லால் நேரு இராமனைச் சந்திக்க இராமன் ஆய்வகத்திற்கு வந்த போது நேருவிடம் அந்த இளைஞன் இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத் தருவான் எனக் கூறினாராம். பஞ்சரத்தினம் புகழ்பெற்ற இயற்பியலர்களான, இராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் மற்றும் சந்திரசேகரின் விண்மீன் ஆயுள்வரையறைக்கான நோபல் பரிசு பெற்ற சு. சந்திரசேகர், நீர்மபடிகவியல் மற்றும் படிக ஒளியியல் ஆய்வுகளுக்காக அறியப்பட்ட சி. சந்திரசேகர், சி. இராமசேஷன் அவர்களின் உறவினர் ஆவார். தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். தமது சமூகப் பணிகளின் போது, ஏற்பட்ட கிருமித் தொற்றால், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இப்படி அறிவியிலிலும், சமூக பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சி.பஞ்சரத்தினம் பிறந்த தினம் இன்று..!