• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் கொள்ளை முயற்சி!

Byமகா

Feb 7, 2022

அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கியில், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் வாழ்வாங்கி, செட்டிகுறிச்சி , பந்தல்குடி, சேதுராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 657 விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். சுமார் 4 கோடி மதிப்பிலான நகைகள் இந்த சங்கத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சங்கத்தில் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சங்கப்பணியாளர்கள் வழக்கம்போல் சங்கத்தை திறந்து பார்த்தபோது பக்கவாட்டு சுவரில் பெரிய துளை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பந்தல்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில் மர்ம நபர்கள் சங்கத்தின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும் மேலும் லாக்கர் வைத்திருக்கப்படும் அறையில் துளையிட முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதனால் சுமார் ரூ 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையில் இருந்து தப்பின. மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து போலீசார் தப்பிச்சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.