இந்தியாவின் அடையாளமாகவும் பெருமையாகவும் திகழும் இந்திய தேசியக் கொடியானது, பல்வேறு தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திற்கு பின் முதன் முதலில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது. போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாகவும் உருவானதே, நம் இந்திய தேசியக் கொடி.
பல முறை திருத்தம் செய்யப்பட்ட தேசியக்கொடி
1947க்கு முன்னர் இந்திய தேசியக் கொடியானது பல முறை உருவாக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தேசியக் கொடியானது மொத்தம் 22 முறை மாற்றி அமைக்கப்பட்டு, இறுதியாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில், ஒரே அளவில் இருக்கும் பட்டைகளோடு, நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோக சக்கரம் தாங்கியபடி உருவாக்கப்பட்டது.
தேசியக் கொடியில் காவி, வெண்மை, பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணக்கொடி என்று அழைக்கப்படுகிறது. காவி என்றால் பலம், தைரியம், வெண்மை நிறம் உண்மை, அமைதியை குறிக்கும், பச்சை நிறம் வளர்ச்சி, பசுமை, விவசாய செழிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சுதந்திர தினம் , குடியரசு தினம் வேறுபாடு
வேறுபாடு:1
*கொடிக்கயிற்றை கீழிருந்து மேல் நோக்கி இழுத்து, பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவே கொடி இவ்வாறு ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வானது “கொடியேற்றம்” (Flag hoisting) என அழைக்கப்படுகிறது.
*கொடியானது முன்னரே கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். பின்னர் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, கொடி பறக்கவிடப்படும். இதனை “கொடியை பறக்கவிடுதல்” (flag unfurling) என அழைப்பர்.
வேறுபாடு:2
*சுதந்திரம் கிடைத்தபோது அரசியல், சட்டம் அமலுக்கு வரவில்லை. அதனால் அப்போது பிரதமர்தான் நாட்டில் முதல் மனிதராக (political head) கருதப்பட்டார்.குடியரசுத் தலைவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று பிரதமரே தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் ரேடியோ, தொலைக்காட்சியின் மூலமாக மக்களிடம் உரையாற்றுவார்.
*குடியரசு தினத்தன்று அரசியல், சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவரே தேசியக் கொடியை பறக்கவிடுவார்.
வேறுபாடு:3
*தேசியக்கொடியானது பிரதமரால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்படும்
*குடியரசுத் தலைவரால் டெல்லி ராஜ் பாத்தில் பறக்கவிடப்படும்
இப்படி நம் தேசிய கொடியின் பாரம்பரியம் மற்றும் கொடி ஏற்றும் வேறுபாடுகள் அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான் என்பதை நாம் இன்று அறிந்துக்கொண்டோம்.