திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலைக்கும், தியாகிகளின் படங்களுக்கும் மலர் தூவி முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை உடைத்தது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கும், போலீசாருக்கு மட்டுமல்ல, சிலைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய விவகாரத்தில் சம்பந்தபட்ட நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைப்பதாக அரசு கூறுகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக ஊர்தி மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் அனுபவம் இல்லாத அதிகாரிகளின் நடைமுறையே காரணம்” என தெரிவித்தார்.