தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்களை பிடித்து சென்ற போலீசாரை கண்டித்து சாலைமறியல் செய்த கிராமமக்கைளை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலகோம்பை ஓடைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய சேகர் என்பவரின் இரண்டு டிராக்டர்களை இராஜதானி சார்பு ஆய்வாளர் இராமபாண்டி தலைமையிலான போலீசார் பிடித்து காவல்நிலையம் கொண்டு வர இருந்த நிலையில் ,பாலகோம்பையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் டிராக்டரை எடுத்து செல்லவிடாமல் வழிமறித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் மணல் அள்ளி கிராமத்திலுள்ள தேவைகளுக்காகத்தான் மணல் பயன்படுத்தப்படுவதாக போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர், இதையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் வருவாய் துறையினர் உரிய அனுமதியில்லாமல் மணல் எடுப்பது குற்றம் என்றும் உடனடியாக கலைந்துசெல்லுமாறும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து கிராமமக்கள் போராட்டம் செய்ததால் தடியுடன் குவிக்கபட்ட விரைவுப்படை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதையடுத்து டிராக்டர்களை காவல்நிலையம் எடுத்துசென்ற போலீசார் மணல்திருட்டில் ஈடுபட்டு தப்பியோடிய டிராக்டர் டிரைவர்கள், உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.