தமிழக நில உரிமை கூட்டமைப்பின் மாநில ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள கிராமப்புற பெண்கள் முன்னேற்ற சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அலமேலு பன்னன் தலைமை தாங்கினார்.தலித் நிலவுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் மற்றும் நில உரிமை செயல்பாட்டாளர்கள் குருசாமி,குருவை குமார், பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்று கருத்துக்களை வழங்கினார்கள்.
ஆலோசனை கூட்டத்தில் நிலமில்லாத வீடு இல்லாத ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள்,பஞ்சமி நிலங்கள்,பூமிதான நிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள உபரி நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அதை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள பட்டியலின மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும்.பஞ்சமி நிலங்களில் கட்டப்பட்டுள்ள வர்த்தக அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பட்டியலின மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒரு தேசிய வங்கி குறைந்தபட்சம் ஐந்து கோடி வரை தொழில் கடன் வழங்க வேண்டும். ஒருகூட்டுறவு வங்கி 50 லட்சம் வரை தொழில் கடன் வழங்க வேண்டும் மற்றும் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இடைநிறுத்தம் இல்லாத தொடர் கல்வியை உறுதி செய்ய வேண்டும், அதிகாலை தூய்மை பணிக்கு செல்லும் தூய்மை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி தடைபடாமல் இருக்க அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முனியாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் கண்ணதாசன், மதுரை மாவட்டம் மலைச்சாமி,சேலம் மாவட்டம் கவிதா, கிருஷ்ணகிரி மாவட்டம் ராமு உட்பட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.