மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முக்கியமாக திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் அதிமுக தரப்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சி பி ஆர் மணி தலைமையில் அதிமுகவினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆளும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையாவோ தமிழக வெற்றி கழக நிர்வாகிகளோ மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யாதது பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மூக்கையா தேவர் நினைவு நாளான செப்டம்பர் 6ஆம் தேதி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மூக்கையா தேவரின் திருவுருவ சிலைக்கு தவறாமல் மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மரியாதை செய்யாதது பொதுமக்கள் மற்றும் சமுதாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெறுவதற்கு முன்பு அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர்கள் சார்ந்த அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு சென்ற நிலையில் வெற்றி பெற்ற பின்பு குறிப்பிட்ட ஒரு சில தலைவர்களின் நினைவு நாள் பிறந்த நாள் விழாக்களை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் இனிவரும் காலங்களிலாவது அனைத்து சமுதாய தலைவர்கள் நினைவு நாள் பிறந்த நாட்களில் அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என கூறினார்கள்.








