புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு, மனனம் , ஓவியம் ஆகிய போட்டிகள் இன்று , 30.8.26 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை புதுக்கோட்டை பெரியார் நகர் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது .

இதில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம் , திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பிற்கான பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சு, மனனம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டன. ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் பெருவிழாவின்( 18.9.26. – 27.9.26 ) பத்து நாள் நிகழ்ச்சிகளில் 25 .9.26 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி நகர் மன்றத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கம்பன் கழகத்தின் தலைவர் திருப்பணிச்செம்மல் எஸ் ராமச்சந்திரன் அவர்களுடைய தலைமையில் நிர்வாகப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




