மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி எதிரில் மற்றும் விக்கிரமங்கலம் ரோடு காளியம்மன் கோவில் தெரு, திருமங்கலம் ரோடு ஆகிய பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி செல்லாமல் பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது ஊராட்சி சார்பில் முறையாக கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது. முக்கியமாக துப்புரவு பணியாளர்கள் முறையாக பணிகளை செய்யாத நிலையில் இது குறித்து ஊராட்சி செயலாளரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக சிஎஸ்ஐ பள்ளி எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுநிரால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கூறுகின்றனர். பலமுறை ஊராட்சி செயலாளரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து கிராம சபை கூட்டத்தில் கூறிய பின்பும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வில்லை என கூறுகின்றனர். ஆகையால் பள்ளி எதிரில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





